"கோவில்களில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு தடைவிதிக்கவில்லை" - தமிழக அரசு


கோவில்களில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு தடைவிதிக்கவில்லை -  தமிழக அரசு
x
தினத்தந்தி 21 Jan 2024 12:12 PM GMT (Updated: 21 Jan 2024 12:18 PM GMT)

உண்மைக்கு புறம்பான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கொடுக்கும் வகையில், அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை" என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நாளை தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு தடைவிதிக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில்,

"தமிழக கோவில்களில் நாளை சிறப்பு பூஜை, அன்னதானம் நடத்த தடை விதிக்கவில்லை. உண்மைக்கு புறம்பான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளை தமிழக அரசு பெற்றுவருகிறது. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான, உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை பரப்புகிறார்கள். பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்ட முயற்சிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. " என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story