தமிழகத்தில் பிற மொழி படங்களை தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படும் - வேல்முருகன்


தமிழகத்தில் பிற மொழி படங்களை தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படும் - வேல்முருகன்
x

தமிழகத்தில் பிற மொழி படங்களை தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படும் என வேல்முருகன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆந்திராவில் சங்ராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் விஜய்யின் 'வாரிசு' படத்தின் வெளியீட்டுக்கான தியேட்டர் ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இது விஜய் படத்துக்கு வந்துள்ள பிரச்சினை அல்ல. அடுத்தடுத்து வரும் தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டு எதிராக ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் இன பாகுபாடு ஆகும். நேரடி தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழி திரைப்படங்களோ எதுவானாலும் தமிழ்நாட்டில் எந்த பாரபட்ச போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் விதிக்கப்படவில்லை.

கலைக்கு மொழி, இனம் இல்லை. எனவே தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிரான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு மட்டுமின்றி, எந்த பிற மொழி திரைப்படமானாலும் அதை தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story