கும்மிடிப்பூண்டி அருகே பால் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி வழிப்பறி - 3 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே பால் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி வழிப்பறி - 3 பேர் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே பால் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி வழிப்பறியில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ரெட்டி தெருவை சேர்ந்த பால் வியாபாரி அல்லிமுத்து (வயது35). இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவன குடியிருப்பில் வாடிக்கையாளர்களுக்கு பால் கொடுத்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கத்தி முனையில் பால் வியாபாரி அல்லிமுத்துவை வழிமறித்தனர்.


சந்தேகம் அடைந்த அல்லிமுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக கடந்து செல்ல முயன்றார். அப்போது அவர்கள் இரும்பு கம்பியால் அவரை தலையில் அடித்தனர். நிலைதடுமாறிய அவர் ரத்த வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அப்போது அவர்கள் 3 பேரும் அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.1,500 ரொக்கப்பணத்தை பறித்து விட்டு தப்பி செல்ல முயன்றனர். அப்போது காயமடைந்த அல்லிமுத்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஓப்படைத்தனர். பின்னர் தலையில் பலத்த காயம் அடைந்த பால் வியாபாரியை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


போலீஸ் விசாரணையில் வழிபறியில் ஈடுபட்டவர்கள், தேவம்பேடு அடுத்த சேகண்யம் கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (20), பெரிய கரும்பூரைச்சேர்ந்த கார்த்திக் (20) மற்றும் வழுதிலம்பேடு காலனியை சேர்ந்த ஷோபன் (22) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story