டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதில் விபத்து: கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி


டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதில் விபத்து: கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி
x

டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்-காக்களூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் அன்னகுமார் (வயது 55). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூரில் இருந்து தனது காரில் டிரைவர் பாஸ்கருடன் பொன்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த மேதினிபுரம் தரைப்பாலம் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நெடும்பரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி (65) படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் சிக்கி கொண்டிருந்த அன்னக்குமார், பாஸ்கர் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இறந்த ராமமூர்த்திக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகன் திருமணத்திற்கு தேவையான பொருட்களை திருத்தணியில் வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story