திருப்பூர்: கண்ணாடிபுத்தூர் பகுதியில் கோயில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை கொட்டிய தேனீக்கள் - 76 பேர் மருத்துவமனையில் அனுமதி


திருப்பூர்: கண்ணாடிபுத்தூர் பகுதியில் கோயில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை கொட்டிய தேனீக்கள் - 76 பேர் மருத்துவமனையில் அனுமதி
x

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூரில் கோயிலில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதால் 76 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூரில் கோயிலில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதால் பெண்கள், குழந்தைகள் உட்பட 76 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கண்ணாடிபுத்தூரில், நீலம்பூர் காளியம்மன் கோவிலுக்காக வேண்டிய மக்கள் ஏறக்குறைய 150 பேர் தீர்த்தம் எடுப்பதற்காக வேண்டி கண்ணாடிபுத்தூர் அமராவதி ஆற்றங்கரைக்குச் சென்றனர். அந்த பகுதியில் ஏற்கெனவே இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மக்கள் தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது அந்த பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த தோட்டத்திலிருந்த தேனீக்கள் கூட்டம் கலைந்து அனைவரையும் கொட்டியுள்ளது. அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பெண்கள், குழந்தைகள் உட்பட 76 பேருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

மூச்சுத்திணறல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story