மதுரை போலி பாஸ்போர்ட் வழக்கில் 14 அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை - தமிழக அரசு


மதுரை போலி பாஸ்போர்ட் வழக்கில் 14 அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை - தமிழக அரசு
x

மதுரையில் அரங்கேறிய போலி பாஸ்போர்ட் வழக்கில் சம்பந்தப்பட்ட 14 அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளக்கம்

மதுரையில் நடந்த போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சில தினங்களுக்கு முன்பு சந்தித்து விரிவான மனுவையும் அளித்தார்.

இந்த நிலையில் மதுரையில் நடந்த பாஸ்போர்ட் மோசடி வழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் இலங்கையை சேர்ந்த சிலர் இந்திய பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 27.9.2019 அன்று மதுரை நகர 'கியூ' பிரிவு குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புலன் விசாரணை அதிகாரிகள் 28 மற்றும் 29.9.2019 ஆகிய தேதிகளில் மதுரையில் இயங்கி வந்த 4 பயண முகவர்களின் அலுவலகங்கள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர். புலன் விசாரணையின்போது 124 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டது. தொடர் புலன் விசாரணையில் 51 பேர் இந்திய பாஸ்போர்ட் பெற்ற விவரமும் தெரிய வந்தது.

28 பாஸ்போர்ட்டுகள் மட்டும்

175 பாஸ்போர்ட்டுகளில், 28 பாஸ்போர்ட்டுகள் இலங்கை தமிழர்கள் போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளனர் என்று இதுவரை தெரியவந்துள்ளது. இதில் 7 இலங்கை நபர்கள் மீது மதுரை நகர 'கியூ' பிரிவிலும், மீதமுள்ள 21 பேர் மீது சென்னை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம் மற்றும் கோவை நகர 'கியூ' பிரிவுகளில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.

இதுதவிர 30 பாஸ்போர்ட்டுகள் இந்தியர்களுக்கு உரியதா அல்லது இலங்கை நாட்டினர் பெற்றதா? என்பது குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 117 பாஸ்போர்ட்டுகளில் ஒரு இந்தியருக்கான போலி பாஸ்போர்ட் தவிர, 116 பாஸ்போர்ட்டுகளும் இந்தியர்களுக்குரியது என்று கண்டறியப்பட்டது.

மதுரை நகர 'கியூ' பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன்விசாரணையில் 475 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு 340 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இந்திய பாஸ்போர்ட் பெற்ற 4 இலங்கை தமிழர்கள் மற்றும் 11 பயண முகவர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் குற்றப்பத்திரிகை

மேலும் போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் பெற்ற

7 நபர்கள், 13 பயண முகவர்கள், 5 காவல்துறை அலுவலர்கள், 14 மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மற்றும் 2 தபால் துறை அலுவலர்கள் உட்பட மொத்தம் 41 நபர்கள் குற்றம் புரிந்துள்ளதாகவும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது புலன் விசாரணை இறுதி செய்யப்பட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குற்ற நடவடிக்கைக்கு முன் அனுமதி

இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசுக்கு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. 25.3.2022 தேதியிலும், தலைமை போலீஸ்காரர் கந்தசாமிக்கு மதுரை மாநகர தெற்கு சரக துணை கமிஷனர் 20.5.2022 தேதியிலும், போலீஸ்காரர்கள் கவியரசு, ஆனந்த் ஆகியோருக்கு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 18.5.2022-ம் தேதியிலும் குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான முன்அனுமதி வழங்கியுள்ளார்.

தபால் துறை ஊழியர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட தபால்துறை கண்காணிப்பாளர் 31.1.2022 அன்று துறையின் முன்அனுமதி வழங்கியுள்ளார். மேலும் 1967-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டப் பிரிவு 15-ன் படி 39 எதிரிகள் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள மதுரை கலெக்டர் முன் அனுமதி வழங்கியுள்ளார். இதில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.

இந்த வழக்கில் அன்றைய மதுரை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சிவக்குமார் மீது வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மதுரை கலெக்டர் 17.5.2022 அன்று முன் அனுமதி வழங்கியுள்ளார்.

மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை

பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் 14 பேர் மீதும் குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான முன்அனுமதி வேண்டி மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முன்மொழிவு 31.12.2021 அன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது அந்த அமைச்சகத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 10.3.2022 அன்று விளக்கங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து உரிய முன் அனுமதி இதுவரை பெறப்படவில்லை. மதுரை 'கியூ' பிரிவு குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு 41 எதிரிகள் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story