டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
x
தினத்தந்தி 30 Jan 2024 12:33 AM GMT (Updated: 30 Jan 2024 12:56 AM GMT)

தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

இதற்காக விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும். அவர்கள், தேர்வுக்கான அனைத்து தகுதி வாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது.

தேர்வுக்கான நாள் 09.06.2024 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பம் செய்யும் நபர் முதலில், அதற்குரிய இணையதளத்திற்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

04.03.2024 முதல் 06.03.2024 வரையிலான 3 நாட்களில், தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்து கொள்ளலாம். அதன் பின்னர் எந்த அனுமதியும் கிடையாது.

அவர்கள், தமிழக வன துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மொபைல் போன்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தங்களுடன் கொண்டு வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். பல்வேறு துறைகளில் மொத்தம் 6,244 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

3 மணிநேரம் நடைபெறும் தேர்வானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் 10-ம் வகுப்பு அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும். பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும்.

பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெறும். அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது. அதற்குரிய இணையதளத்தில் சென்று பிற விவரங்களை படித்து தெரிந்து கொள்ள முடியும்.


Next Story