மழை காரணமாக திருவாரூர், காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


மழை காரணமாக திருவாரூர், காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 3 Feb 2023 1:22 AM GMT (Updated: 3 Feb 2023 1:51 AM GMT)

மழை காரணமாக தஞ்சை மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால்,

தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது, காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மானாமதுரை, புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

இந்த சூழலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஜந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதேபோல மழை காரணமாக தஞ்சை மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தில் மழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story