பாஜக அரசை வீழ்த்துவதொன்றே இந்திய மக்களின் புத்தாண்டுச் சூளுரையாக அமைந்திட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்


பாஜக அரசை வீழ்த்துவதொன்றே இந்திய மக்களின் புத்தாண்டுச் சூளுரையாக அமைந்திட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
x

கோப்புப்படம் 

சாதி, மத பேதமற்ற சமூக மாற்றத்திற்கான புத்தாண்டாக இவ்வாண்டு அமைந்திட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்.

மனித நேயம், மதச்சார்பின்மை, சமூக நீதி, நாடாளுமன்ற ஜனநாயகம், மாநில உரிமைகள் ஆகிய அனைத்தையும் கபளீகரம் செய்யும் மத்திய பாஜக அரசு மதவெறியை பரப்பி மக்களை கூறுபோடும் பாசிச எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது. அதனை வீழ்த்தும் சாதனை மிக்க ஆண்டாக 2024 அமைந்திட வேண்டுமென்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்போம்.

மத்திய பாஜக அரசு மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சி அடித்தளம் கொண்ட அரசியல் சாசனத்தின் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்திட்ட ஆண்டாகவே விடைபெறும் ஆண்டு அமைந்தது. வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் என்ற இரட்டை இலக்கோடு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. வறுமை, வேலையின்மை, விலை உயர்வு, பொதுத்துறை தனியார்மயம், மனுவாத கருத்தியல் பரப்பு, பாலின அடிப்படையிலான அநீதிகள், தீண்டாமை உள்ளிட்ட சாதிய சமூகக் கொடுமைகள், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என மத்திய பாஜக அரசு நாட்டையே நாசம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் வெள்ள சேதத்திற்கு உரிய நிவாரண நிதி கொடுக்க மறுத்து வருவது, மாநிலத்திற்கான நிதி பங்கீட்டை மறுப்பது உள்ளிட்ட பாகுபாட்டு வஞ்சக அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. பாசிச பாணி ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் மத்திய பாஜக அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதன் மூலமே இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதுகாக்க முடியும்.

மோடி ஆட்சியில் நாடாளுமன்றத்திற்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை, ஜனநாயக உரிமைகள் பறிப்பு, கருப்பு சட்டங்கள், கருத்து சுதந்திரம் நெரிப்பு, ஊடக சுதந்திரம் ஒடுக்குதல் என கடந்த ஆண்டு கிழிக்கப்பட்டவை நாள்காட்டியின் தாள்கள் மட்டுமல்ல, இந்திய மக்களின் இதயங்களும்தான். இதற்கு ஆறுதல் தரும் ஆண்டாக வரும் ஆண்டு அமைய வேண்டுமானால் ஆட்சி அதிகாரத்தில் மாறுதல் வேண்டும்.

இதற்கான ஒரு நல்வாய்ப்பு வாசலை திறக்கும் ஆண்டாக வரும் ஆண்டு அமைந்திட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை நடப்பாண்டில் நாடு சந்திக்கவுள்ள நிலையில், மக்கள் விரோத, எதேச்சதிகார, வகுப்புவாத, வலதுசாரி பாஜக அரசை வீழ்த்துவதொன்றே இந்திய மக்களின் புத்தாண்டுச் சூளுரையாக அமைந்திட வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதிய அணி திரட்டல், பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் சாதிய விஷக் கருத்துக்களை பரப்பும் நடவடிக்கைகளை புறந்தள்ளி சாதி, மத பேதமற்ற சமூக மாற்றத்திற்கான புத்தாண்டாக இவ்வாண்டு அமைந்திட வேண்டும். விடைபெறும் ஆண்டின் அனுபவங்களை உரமாக்கி பூக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story