தடையை மீறும் சுற்றுலா பயணிகள்


தடையை மீறும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 22 Oct 2023 8:30 PM GMT (Updated: 22 Oct 2023 8:30 PM GMT)

ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் தடையை மீறுகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்
ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் தடையை மீறுகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


சுற்றுலா பயணிகள்


கோைவ மாவட்டம் பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை பகுதியில் நிரம்பி வழியும் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் குளித்து மகிழ ஆழியாறு அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் சிலர், தடையை மீறி வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பதால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது.


அறிவிப்பு பலகை


இதற்கிடையில் ஆழியாறு அணைக்கு எதிரே உள்ள தடுப்பணையில் குளிக்கும்போது அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை, போலீசார் மூலம் அந்த தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.


ஆனாலும், தடையை மீறி அந்த தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். அங்கு இருக்கும் ஆபத்தை அவர்கள் உணருவது இல்லை.


தடுக்க வேண்டும்


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. சமீபத்தில்தான் வால்பாறையில் 5 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.


இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க, ஆபத்து நிறைந்த ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.



Next Story