மெட்ரோ ரெயில் பணி காரணமாக பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ ரெயில் பணி காரணமாக பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம்
x

கோப்புப்படம்

சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் பணி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால் அப்பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு பரங்கிமலை பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் இன்று (21.02.2024) முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்.கே.என் ரோடு மற்றும் ரெயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் நோக்கி செல்ல அனுமதி இல்லை.

ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையில் செல்வதற்கு வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ செல்லலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story