கார் மீது மோதாமல் இருக்க 'பிரேக்' பிடித்தபோது பரிதாபம்: லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


கார் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது பரிதாபம்: லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x

தாம்பரம் சானடோரியம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

சென்னை

அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கைல் தாமஸ் (வயது 18). பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிளவுமென்ட் ஜோசுவா (18). இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.டபிள்யூ படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தாம்பரம் சானடோரியம் அரசு சித்தா ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற கார் ஒன்று திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதில், பின்னால் வேகமாக வந்த இவர்கள் கார் மீது மோதாமல் இருக்க பிரேக்கை அழுத்தியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்ற மினி லாரி ஒன்று, சாலையில் விழுந்து கிடந்த 2 பேர் மீதும் ஏறி இறங்கியதில் அவர்கள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story