லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி- மற்றொரு சம்பவத்தில் தொழிலாளி சாவு


லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி- மற்றொரு சம்பவத்தில் தொழிலாளி சாவு
x

பூந்தமல்லி அருகே சிக்னலில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

சென்னை

மதுரவாயலை அடுத்த நொளம்பூரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பாரிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சிக்னல் அருகே சென்ற போது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அன்பரசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்து போன அன்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேபோல் பெரம்பூரை சேர்ந்தவர் ராஜா ரமேஷ்பாபு (47). தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன தொழிற்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு கவசங்கள் தைத்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மோட்டார் சைக்கிள் நிறுவனத்திற்கு பாதுகாப்பு உபகரணங்களை தைத்து எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பாபாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலின் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பஸ்சின் சக்கரம் ராஜா ரமேஷ்பாபு உடலின் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன ராஜா ரமேஷ்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் ரமேஷ் (44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story