அ.தி.மு.க.- அ.ம.மு.க.வை இணைக்க டெல்லியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது - போட்டுடைத்த டி.டி.வி. தினகரன்


அ.தி.மு.க.- அ.ம.மு.க.வை  இணைக்க டெல்லியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது -  போட்டுடைத்த டி.டி.வி. தினகரன்
x

அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைப்பதற்கு டெல்லியில் சில நலம் விரும்பிகள் முயற்சி மேற்கொண்டது உண்மை தான் என டி.டி.வி. தினகரன் கூறி உள்ளார்.

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. கட்சியில் நடக்கும் சண்டையில் நான் இல்லை. நான் தனிக்கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அ.ம.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது.

நாங்கள் நடத்தும் போராட்டத்தில் வெற்றிபெறுவோம். அ.தி.மு.க.வை திரும்பப்பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைப்பதற்கு டெல்லியில் சில நலம் விரும்பிகள் முயற்சி மேற்கொண்டது உண்மை தான். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்துக்கு நான் சம்மதித்தேன்.

எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது. ஆனால் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் முதல்-அமைச்சர் வேட்பாளராக அவரை களம் இறக்கக்கூடாது என்று தெரிவித்தேன். அவரை முன்னிலைபடுத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெறாது என்றேன். ஆனால் எங்களது முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

அதனால் டெல்லி மேலிடமும், எடப்பாடி பழனிசாமியை கை கழுவி விட்டனர். கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதல்-மந்திரி பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார்.

ஆனால் அவர் கட்சி தொண்டர்களுக்கும், சசிகலாவுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். =எடப்பாடி பழனிசாமியை எந்தவிதத்திலும் நம்ப முடியாது. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது அவர் தமிழகத்துக்கு வந்து செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று கூறினார். அந்த அளவுக்கு அவர் கொடூரராக நடந்து கொண்டார்.

அரசியலுக்காக அவர் எதையும் செய்வார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தது மிகப்பெரிய தவறாகும். அதை அவர் இப்போதுதான் உணருகிறார். எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்ப இயலாது. எனவே எந்த காலத்திலும் அவருடன் சேரும் எண்ணம் இல்லை.

]நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா டான்சி வழக்கில் சிறை சென்றபோதே மிக எளிதாக முதல்-அமைச்சர் ஆகி இருக்க முடியும். ஆனால் எனது இயல்பு அப்படிப்பட்டது அல்ல. ஆனால் நாங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பரிந்துரை செய்து முதல்-அமைச்சராக்கினோம்.

நான் போராட்ட குணம் கொண்டவன். போராடி மக்கள் ஆதரவுடன் நிச்சயமாக ஆட்சியை பிடிக்க முடியும். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவிடம் தான் விசுவாசம் காட்டினார்கள். அதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை பதவி விலக சொன்னார்கள். ஆனால் அவர் தர்மயுத்தம் செய்தார். பிறகு மோடி பேச்சை கேட்டு எடப்பாடி பழனிசாமியிடம் போய் சேர்ந்தார்.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் என்னுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவர் என்னிடம் எப்போதும் தொடர்பு கொண்டதே கிடையாது. அவர் எனது நண்பர். 10 ஆண்டுகள் நாங்கள் இணைந்து அரசியல் பணிகள் செய்துள்ளோம். பிரச்சினை ஏற்பட்ட சமயத்தில் ஒரு வாரம் மட்டும் அவர் அமைதியாக இருந்திருந்தால் இப்போது நடக்கும் அரசியல் நாடகம் எல்லாம் நடந்திருக்காது.

சசிகலாவுக்காக நாங்கள் தலைவர் பதவியை தயாராக வைத்துள்ளோம். கோர்ட்டில் அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உரிமையை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை ஏற்பார். அதன்பிறகு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

நாங்கள்தான் அம்மாவின் உண்மையான விசுவாசிகள் என்பதை நிரூபித்து காட்டுவோம். அதன்பிறகு ஒவ்வொருவராக நிச்சயம் எங்கள் பக்கம் வருவார்கள். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக வாய்ப்பு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகள் இதை பிரதிபலிப்பதாக உள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார்.

மேற்கு வங்காளத்தில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கலாம். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் என்னை விரும்புகிறார்கள். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை நோக்கித்தான் நான் உழைத்து கொண்டிருக்கிறேன்.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பா.ஜனதாவுக்கு மிக மிக முக்கியமானது. பா.ஜனதா உரிய மரியாதை கொடுத்தால் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வேன். இல்லையென்றால் தனியாக போட்டியிடுவோம். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.


Next Story