மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 9 April 2024 5:22 AM GMT (Updated: 9 April 2024 6:00 AM GMT)

பொற்றாமரைகுளத்தின் அருகே நின்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மதுரை,

பா.ஜனதா மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத்சிங் பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகம் வந்த அவர்,நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு, இரவு மதுரை வந்து அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முக்குறுணி விநாயகர், சுந்தரேசுவரர் சன்னதிகளுக்கு சென்று ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார்.

பின்னர் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை ராஜ்நாத் சிங் வலம் வந்து, கொடிமரம் பகுதியில் உள்ள பிரமாண்டமான தூண்கள், சிற்பங்கள், சிலைகள், கோபுரங்கள் என கோவிலில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் பொற்றாமரைகுளத்தின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து மதுரை விமான நிலையத்திற்கு ராஜ்நாத் சிங் புறப்பட்டு சென்றார். ராஜ்நாத் சிங் வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் 9 மணி முதல் 10 மணி வரை பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


Next Story