கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழா..! ஆனால் இதற்கு தடை?


தினத்தந்தி 12 Jun 2022 2:45 AM GMT (Updated: 12 Jun 2022 2:46 AM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2 வருடங்களுக்கு பிறகு வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்:

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று நடக்கிறது. விசாக தினத்தன்று முருக பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவில் இராக்கால அபிஷேம் நடைபெற்றது.

சாப விமோசனம் விசாக திருநாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறும்..

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

இதில் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பால் காவடி, அன்ன காவடி, மயில் காவடி, சர்ப்ப காவடி என பல்வேறு காவடிகளை சுமந்த படி வந்து முருகபெருமானுக்கு நேர்த்தி கடன் செலுத்துவர். தற்போது மாவட்ட நிர்வாகம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சர்ப்பக்காவடியானது பக்தர்கள் கொண்டுவருவதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டுவரும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். கோவில் வளாகம், மண்டபங்களில் பக்தர்கள் தங்கியிருந்து வழிபடுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் விழாக்கோலம் பூண்டது. விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.



Next Story