பார்க்கத்தான் கம்பீரம்.. பழகுவதில் குழந்தை: விஜயகாந்த் குறித்து சீமான் கருத்து


பார்க்கத்தான் கம்பீரம்.. பழகுவதில் குழந்தை: விஜயகாந்த் குறித்து சீமான் கருத்து
x

விஜயகாந்த் நலமுடன், உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்கும் என சீமான் தெரிவித்தார்.

தூத்துக்குடி:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விஜயகாந்த் என்றால் அச்சமின்மை, துணிவுதான். எதற்கும் பயப்படமாட்டார். தவசி படத்தில் பணியாற்றும்போது அவருடன் மனம்விட்டு பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவரைப்போல சிறந்த மனிதர் கிடைப்பது அரிது. புகழின் உச்சியில் இருந்தபோதும் அதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருந்தார்.

விஜயகாந்த் நலமுடன், உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்கும். அவர் ஆக சிறந்த மனிதர், பண்பாளர். விஜயகாந்த் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைப்போல சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கும்போதே அரசியலுக்கு வந்து 10.5 சதவீத வாக்குகள் வாங்கி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது என்பது சாதாரண விஷயம் அல்ல.

விஜயகாந்த் பார்க்கத்தான் கம்பீரமாக இருப்பார். ஆனால் பேசி பழகுவதில், மனதளவில் அவர் ஒரு குழந்தைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story