என்.எல்.சி.யை கண்டித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்
வளையமாதேவியில் என்.எல்.சி.யை கண்டித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு
நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக பல்வேறு கிராமங்களை கையகப்படுத்தி வருகிறது. அதன்படி கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், சாத்தப்பாடி,ஆதனூர், மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க என்.எல்.சி.நிர்வாகம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து சேத்தியாத்தோப்பு கடைவிதியில் கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த துணை போலீ்ஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி 26 பேர் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.