விழுப்புரம்: விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்த நபர் மின்சாரம் தாக்கி பலி


விழுப்புரம்: விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்த நபர் மின்சாரம் தாக்கி பலி
x

விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்த நபர் மின்சாரம் தாக்கி பலியானார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள வி.புதூர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கிருபாநிதி மகன் கார்த்திக். இவருக்கு சொந்தமாக இளங்காடு கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. நேற்று மாலை கார்த்திக், விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது நிலத்துக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள வாய்க்கால் அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர், உடல் கருகிய நிலையிலும் அழுகிய நிலையிலும் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கார்த்திக், உடனடியாக வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபரின் இடுப்பில் சுத்தியல், இரும்பு கொரடா ஆகியவை இருந்துள்ளது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. பின்னர் அந்த நபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கார்த்திக்கின் விவசாய நிலத்திற்கு வந்து அங்குள்ள மோட்டார் கொட்டகையில் செல்லும் தாமிரக்கம்பிகளை திருடுவதற்காக மீட்டர் பாக்சை திறந்து பீஸ் கேரியரை பிடுங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி இறந்திருப்பதும், கடந்த 2 நாட்களாக கார்த்திக் தனது விவசாய நிலத்திற்கு செல்லாததும், இதனால் யாரும் பார்க்காத நிலையில் அந்த நபரின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இறந்துபோன நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அவர் மீது எந்தெந்த பகுதிகளில் திருட்டு வழக்குகள் இருப்பது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் தாமிரக்கம்பிகளை திருட வந்த நபர், மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story