பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு


பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
x

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 255 கனஅடி விதம் தண்ணீர் பாய்கிறது.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 27-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 32 அடியாக பதிவாகியது. 2.376 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 400 கன அடி வீதம், மழைநீர் வினாடிக்கு 410 கன அடி விதம் வந்து கொண்டு இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் நடத்தி நேற்று காலை பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டனர். வினாடிக்கு 255 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 19.39 அடியாக பதிவாகியது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். இதில் 2.455 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 108 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Next Story