2,000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் தருகிறோம் - கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி


2,000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் தருகிறோம் - கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
x

செல்லாத 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் தரப்படும் என்று கிருஷ்ணகிரி பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூருக்கு செல்லும் வழியில் மேம்பாலத்தையொட்டி நேற்று பல இடங்களில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டு அதில் செல்போன் நம்பர் ஒன்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து குழப்பம் அடைந்தனர். சிலர் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அந்த நபர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தந்தால் தான், 3 ஐநூறு ரூபாய் நோட்டுகள் தருவேன் என்றும், மாற்றி கொடுப்பதற்கு 500 ரூபாய் கமிஷன் என்றும் கூறினார்.

இதுகுறித்து அறிந்த போலீசாரும் சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் பேசி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் என்பதும், பொங்கல் பண்டிகையின் போது அவரது வீட்டை சுத்தம் செய்யும் போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 4 கிடைத்ததாகவும், அதை சென்னை சென்று ரிசர்வ் வங்கியில் மாற்றி வந்ததாகவும், ஆகவே ரூ.500 கமிஷன் பெற்று இதை போல மாற்றலாம் என்ற எண்ணத்தில் தான் சுவரொட்டி ஒட்டியதாகவும் கூறினார்.

தொடர்ந்து போலீசாரிடம் பேசிய அவர், உங்களிடம் ஏதேனும் 2 ஆயிரம் ரூபாய் உள்ளதா... கொடுங்க மாற்றி தருகிறேன் என்றும் கேட்டுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பர்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story