நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிட காங்கிரசுக்கு ஒரு தொகுதி கேட்போம் : கே.எஸ்.அழகிரி


நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிட காங்கிரசுக்கு ஒரு தொகுதி கேட்போம் : கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 30 Jan 2024 11:45 PM GMT (Updated: 31 Jan 2024 5:55 AM GMT)

சென்னையில் போட்டியிட திமுகவிடம் பேசி வாய்ப்பு பெற்றுத் தருவதாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளேன் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமர் கோவிலை கட்டிவிட்டதால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். கோவில் கட்டியவர்கள் யாரும் வெற்றிபெற்றதாக வரலாறு கிடையாது. அதுவும், நீங்கள் கோவில் வேலை முடியாமலேயே கும்பாபிஷேகம் செய்துள்ளீர்கள். அதனால், 4 சங்கராச்சாரியார்கள் உங்களை எதிர்க்கிறார்கள்.

ஆர்.என்.ரவி, கவர்னராக வந்த நாள் முதல் இதுவரை தான் சொன்னது எதையும் தப்பு என்று ஒப்புக்கொண்டது கிடையாது. காந்தியின் விவகாரத்தில் முதல் முறையாக தப்பு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இது தான் காந்தியின் சக்தி, காந்தியின் பெருமை.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் விலகினோம் என்பதற்கான காரணத்தை அ.தி.மு.க. இதுவரை மக்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே, பா.ஜனதா - அ.தி.மு.க. இடையே கள்ள உறவு இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

கூட்டணியில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது. உடனே அங்குள்ள அந்த கட்சி தொண்டர்கள் நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பதுதான் நமது வேலையா? என்று கேட்பார்கள். இது தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சியிலும் இது போல கேட்பார்கள்.

சென்னையில் ஒரு தொகுதி வாங்கி கொடுத்தால் என்ன? சென்னை என்ன தி.மு.க.வுக்கு தான் கொடுக்க வேண்டுமா? என என்னிடமே பலர் கேட்டார்கள். உங்களுக்காக நான் கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். இது இயல்பு.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.


Next Story