நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? கவர்னர் மாளிகை விளக்கமளிக்க வேண்டும் - ராமதாஸ்


நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? கவர்னர் மாளிகை விளக்கமளிக்க வேண்டும் - ராமதாஸ்
x

நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன என்பது குறித்து கவர்னர் மாளிகை விளக்கமளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க கவர்னர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல!

நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என கவர்னர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் கவர்னரா? மத்திய அரசா? ஜனாதிபதியா? என்பதை கவர்னர் மாளிகை தெரிவிக்கவில்லை!

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என கவர்னர்மாளிகை தெரிவித்ததாக மே 4ஆம் தேதி முதலமைச்சர் பேரவையில் அறிவித்தார். ஆனால், கவர்னர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் கவர்னர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது!

தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் கவர்னர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், கவர்னர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.



Next Story