தமிழ்நாடு என்ன அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? பிரதமர் மோடிக்கு முத்தரசன் கேள்வி


தமிழ்நாடு என்ன அணுக்கழிவு குப்பைத் தொட்டியா?  பிரதமர் மோடிக்கு முத்தரசன் கேள்வி
x
தினத்தந்தி 4 March 2024 6:16 AM GMT (Updated: 4 March 2024 6:25 AM GMT)

கல்பாக்கத்தில் அதிவேக ரியாக்டர் இயக்கத்தை பிரதமர் மோடி தொடக்கி வைப்பது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பாவினி நிறுவனம் 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக ரியாக்டர் (Prototype Fast Breeder Reactor) எரிபொருள் நிரப்பும் திட்டத்தை பிரதமர் இன்று தொடக்கி வைக்கிறார்.

இந்த அணு மின் உற்பத்தியால் இப்பகுதியின் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அதிவேக ரியாக்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்களும், வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அணுமின் உற்பத்தி திட்டத்தால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க போராடி வரும் நிலையில், கல்பாக்கத்தில் அதிவேக ரியாக்டர் இயக்கத்தை தொடக்கி வைப்பது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியாகும்.

அண்மையில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை தொடர்ந்து இருமுறை சந்தித்த தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வழங்க முன்வராத மத்திய அரசு தமிழ்நாட்டின் சுற்று சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் அதிவேக ரியாக்டர் இயக்கத்தை தொடங்குவது மக்கள் நலனுக்கு எதிரானது என்பதால் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story