விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கும்..? - பள்ளிக்கல்வித் துறை தகவல்


விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கும்..? - பள்ளிக்கல்வித் துறை தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 March 2024 8:34 PM GMT (Updated: 12 March 2024 2:16 AM GMT)

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும்,

சென்னை,

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதியுடனும், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத் தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் பொதுத் தேர்வு நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும். அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற தகவலை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி ஆரம்பித்து 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும். ஏற்கனவே பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்ட நேரத்தில், பிளஸ்-2 வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு மே 10-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மே 14-ந்தேதியும் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story