தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்? கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்


தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்? கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்
x

தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்? என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

6 அம்சங்களை சுட்டிக்காட்டி இந்த தகவல் அமைந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கவர்னருக்கு அவமானம்

கவர்னர் உரையை நீக்குகிறேன் என அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய அவ்வையாரின் "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்" என்கிற வரிகளையும், பாரதியாரின் வாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும், நாட்டுமக்களுக்கு கவர்னர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர்.

கவர்னர் உரையை ஜனவரி 6-ந் தேதி அன்று அரசு அனுப்பி வைத்தது. அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை கவர்னர் குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது. நீங்கள் பேசும்போது தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லியுள்ளனர். (அது ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது.) ஆனால் கவர்னர் சபையில் அதை நீக்கி வாசித்தபோது உடனடியாக சேனல்களுக்கு அதை அனுப்பி வைத்தும், கவர்னர் இருக்கும்போதே கவர்னர் உரைக்குப்பின் சபை முடித்து வைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி தீர்மானம் கொண்டு வரப்பட்டு கவர்னர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

கண்டபடி புகழ்ச்சி

எதை, எதை கவர்னர் ஆட்சேபித்தார் ஏன் என்பதை பார்ப்போம். ஜனவரி 12-ந் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவுக்கூரும் இளைஞர் தினம். அந்த தினத்தை குறிப்பிட்டு சேர்த்து பேசியுள்ளார். இது அவை மரபை மீறிய செயல் அல்ல.

கவர்னர் ஆட்சேபித்த மற்றும் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அரசாங்கத்தைப் கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகள். நடைமுறை வேறாக இருந்ததால் ஆட்சேபித்தார், பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவிர்த்தார்.

"இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும்" இதை கவர்னர் சொல்ல முடியாது. முதல்-அமைச்சர் அவர் உரையில் பேச வேண்டியது. கொள்கை, செய்யவேண்டியதை மட்டும் கவர்னர் உரையில் வைப்பார்கள். இதுபோன்ற அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன்' என்று கவர்னர் சொல்லிவிட்டார்.

அமைதியின் சொர்க்கமா?

இந்த மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாக தொடர்கிறது, வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது என்று இல்லாத ஒன்றை பதிய வைப்பதை தவிர்த்தார். தினசரி செய்தி சேனல்கள், நாளிதழ்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை அடுக்காக புகாராக சொல்லும்போது இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்பது யதார்த்தம் அல்ல (சமீபத்தில் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு நடந்த பாலியல் சீண்டலில் குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாத்ததும், பின்னர் எதிர்ப்பு கிளம்பியபின் கைது செய்ததும் நடந்தது)

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும். அது சர்வதேச பிரச்சினை மத்திய அரசின் தலையீடு இல்லாமல் எப்படி நடக்க முடியும் என்பதால் ஒன்றிய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை சேர்த்து படித்தது தவறா?

பிழையான ஒன்று

பல இடங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியின் சொர்க்கமாக மாநிலம் திகழ்கிறது என்கிற வார்த்தைகள் முதல்-அமைச்சர் மற்றும் டி.ஜி.பி.யை போற்றும் வகையில் இருந்தது. இந்த வார்த்தைகள் கவர்னரால் தவிர்க்கப்பட்டது.

தொழில் முதலீடு குறித்து மிகைப்படுத்தப்பட்ட செய்தி. கடந்த 1½ ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பது ஜனவரி 7-ந் தேதி கவர்னர் உரையில் இருந்தது. இதை கவர்னர் சுட்டிக்காட்டி மாற்றச்சொன்னார். அதை அப்படியே இருந்ததால் தவிர்த்தார். உண்மை என்ன? கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு ஈர்த்த அந்நிய முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள் என பெருமையாக பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் மராட்டியம் - 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா 25 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது.

இதில் 10-ல் ஒருபங்கை ஈர்த்துவிட்டு பெருமையடைவது பிழையான ஒன்று என்பதால் தவிர்த்தார்.

சபாநாயகர் வேடிக்கை பார்த்தார்

சட்டசபை உறுப்பினர்கள் கவர்னரை சுற்றி நின்று உரையை வாசிக்க விடாமல் கோஷமிட்டு கெரோ செய்தனர். இது இதற்கு முன் நடக்காத ஒன்று. கவர்னர் பேச்சுக்கு எதிராக கெரோ செய்து கோஷம் எழுப்பும் போது சபாநாயகர் தடுக்காமல் அவர்களை வேடிக்கை பார்த்தார்.

கவர்னர் இருக்கையில் இருக்கும்போது, கவர்னர் உரையின் தமிழாக்க சபாநாயகர் உரைக்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால் சபை மரபை மீறி முதல்-அமைச்சர் கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிகளின்படி இல்லை, அவை மரபை மீறிய செயல்.

சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள கவர்னரின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குவது என்பது சட்ட வல்லுனர்கள் முன் உள்ள தீவிர விவாதப் பொருளாகும்.

இவ்வாறு கவர்னர் மாளிகை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.


Next Story