அரியலூரில் பரவலாக கனமழை


அரியலூரில் பரவலாக கனமழை
x
தினத்தந்தி 16 Oct 2023 6:01 PM GMT (Updated: 16 Oct 2023 6:05 PM GMT)

அரியலூரில் பரவலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரியலூர்

அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 2.15 மணியளவில் இடி, மின்னல் சத்தத்துடன் மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் மழை அடங்கிய நிலையில், மீண்டும் 3.15 மணியளவில் கன மழையாக உருவெடுத்தது. சுமார் 1 மணி நேரம் விடாமல் பெய்த இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் பலர் சாலைகளில் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. மேலும் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி மற்றும் சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களுக்கு இந்த மழை மிகவும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் கூறினர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு விவரம் பின்வருமாறு:- அரியலூரில் 29.6 மில்லிமீட்டர் மழையும், திருமானூரில் 3.2 மில்லிமீட்டர் மழையும், குருவாடியில் 84 மில்லிமீட்டர் மழையளவும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 118.8 மில்லிமீட்டர் மழையும், சராசரியாக 16.97 மில்லிமீட்டர் மழையளவும் பதிவாகியுள்ளது.


Next Story