செங்கல்பட்டில் காட்டில் வனவிலங்குகள் வேட்டை; 2 பேர் கைது


செங்கல்பட்டில் காட்டில் வனவிலங்குகள் வேட்டை; 2 பேர் கைது
x

செங்கல்பட்டில் காட்டில் வனவிலங்குகள் வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு வனச்சரகத்துக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான காப்புக்காட்டில் இரவு நேரங்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தன. அதன்படி வனச்சரகர் கமல்ஹாசன் தலைமையிலான வனத்துறையினர் செங்கல்பட்டு அருகேயுள்ள வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காட்டுப்பன்றி, காட்டு பூனை, காட்டு முயல் ஆகியவற்றை துப்பாக்கியால் சுட்டு பிடித்த நிலையில், காப்புக் காட்டில் இருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்த வனத்துறையினர் செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே தங்கியுள்ள கார்த்திக் (வயது 28), மற்றொரு கார்த்திக் (33) என்பதும், அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வேட்டைக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் துப்பாக்கி, கத்திகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், 2 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட ஜெயிலில் அடைத்தனர்.


Next Story