அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு.. மார்ச் 17 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு


அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு.. மார்ச் 17 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 3 March 2023 6:09 AM GMT (Updated: 3 March 2023 8:40 AM GMT)

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரிய ஓபிஎஸ் தரப்பினர் வழக்கில் ஈபிஎஸ் பதில்தர ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ.மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

ஏற்கெனவே பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்த நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை.

இதனை அடிப்படையாக கொண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யவேண்டும் என ஓபிஎஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது ஓபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஈபிஎஸ் தரப்பு செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என்றும், எந்த நோட்டீசும் இல்லாமல் நீக்கியுள்ளனர் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும், கட்சி விதிப்படி ஒருங்கினைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிகை எடுக்கமுடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் அதிமுக ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார்.

இந்த வழக்கில், ஈபிஎஸ் தரப்பை கேட்காமல் உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்தது.

அதிமுக, ஈபிஎஸ் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களிடம் விளக்கம் கோராமல் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க வரும் 17 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்து வழக்கை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story