பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்-குழந்தை சாவு - உறவினர்கள் சாலை மறியல்


பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்-குழந்தை சாவு - உறவினர்கள் சாலை மறியல்
x

சென்னையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை சாவு பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை

சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (வயது 31). சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி ஜனகவள்ளி(28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான ஜனகவள்ளிைய 2-வது பிரசவத்துக்காக நேற்று முன்தினம் புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மகப்பேறு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜனகவள்ளி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், புளியந்தோப்பு மகப்பேறு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லாததுதான் ஜனகவள்ளி மற்றும் அவரது குழந்தை சாவுக்கு காரணம் என்று கூறி எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் ஜனகவள்ளியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் புளியந்தோப்பு போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விசாரணை நடத்தும்படி மருத்துவ கல்வி இயக்குனருக்கு துணை கமிஷனர் பரிந்துரை கடிதம் கொடுத்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story