2 குழந்தைகளை துண்டால் உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


2 குழந்தைகளை துண்டால் உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x

மணப்பாறை அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி

குடும்ப பிரச்சினை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), பொக்லைன் டிரைவர். இவருடைய மனைவி தங்கமணி (26). இவர்களுக்கு சரோனிகா (6), பிரித்விகா (3) ஆகிய 2 மகள்களும், லட்ஜித் (1½) என்ற மகனும் இருந்தனர். சரவணன் சேலத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆண்டிகவுண்டம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக தங்கமணியை அவரது மாமனார்-மாமியார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கமணி தனது மூத்த மகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு பிரித்விகா, லட்ஜித் ஆகியோருடன் மாயமானார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்கமணி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

பிணமாக மீட்பு

இதற்கிடையில் நேற்று காலை அவர்களது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பயன்பாடு இல்லாத ஒரு கிணற்றின் மேல் பகுதியில் தங்கமணியின் காலணி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தேடினர். நீண்ட நேரம் தேடலுக்கு பிறகு தங்கமணி மற்றும் அவரது மகன் லட்ஜித் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன்பிறகு பிரித்விகாவின் உடல் சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டது.

பிரேத பரிசோதனை

தங்கமணி தனது உடலில் குழந்தைகளை துண்டால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்கள் 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கமணிக்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story