சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பலி - மகன் கண் எதிரே பரிதாபம்
![சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பலி - மகன் கண் எதிரே பரிதாபம் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பலி - மகன் கண் எதிரே பரிதாபம்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/02/852987-cni22sep0204.webp)
சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் மகன் கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பெரம்பூர், திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி பங்கஜம் (வயது 40). இவர்களுடைய மகன் அருண் (18). இவர், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று பங்கஜம், தனது மகன் அருணுடன் பூந்தமல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்துவிட்டது. இதனால் நிலைதடுமாறிய அருண், பிரேக் பிடித்தார். இதில் தாய்-மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பங்கஜம், மகன் கண்எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அருண் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான பங்கஜம் உடலை பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.