அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது - அமைச்சர் சிவசங்கர் உத்தரவு


அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது - அமைச்சர் சிவசங்கர் உத்தரவு
x
தினத்தந்தி 28 Sep 2022 2:29 PM GMT (Updated: 28 Sep 2022 2:29 PM GMT)

அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி வருமாறு:-

அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களின் கூட்டம், போக்குவரத்துத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. போக்குவரத்து கழகங்கள் சார்பாக வாட்ஸ்ஆப் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பெண்களை ஓசியில் பயணிப்பதாக கூறிய குற்றச்சாட்டின் எதிரொலியாக அவர்கள், பஸ் நடத்துநர்களும் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக வந்த தகவல்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக பெண்கள் பயணிப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். பெண்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது என்று அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மேலாண் இயக்குநர்கள், கிளை மேலாளர்களின் மூலம் அறிவுரை வழங்குவார்கள்.

பஸ் டிக்கட் கட்டணம் ஏறவே ஏறாது என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். பக்கத்து மாநிலங்களில் டீசல் விலை ஏறும்போதெல்லாம் பஸ் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது. சில மாநிலங்களில் போக்குவரத்துகழகங்களே கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கட்டண விகிதமே தொடரும் என அவர் கூறினார்.


Next Story