பாதுகாப்பான நகரம்' என்ற கருத்தை மையப்படுத்தி சென்னையில் இன்று பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி


பாதுகாப்பான நகரம் என்ற கருத்தை மையப்படுத்தி சென்னையில் இன்று பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 28 May 2022 6:20 AM GMT (Updated: 28 May 2022 6:24 AM GMT)

பாதுகாப்பான நகரம்' என்ற கருத்தை மையப்படுத்தி சென்னையில் இன்று பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியை மேயர் பிரியா தொடங்கி வைக்கிறார்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொது இடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும், 'சிங்கார சென்னை 2.0' - வீதி விழாவின் ஒரு பகுதியாக, 'பாதுகாப்பான சென்னை' என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை மேயர் பிரியா, இந்திரா நகர் பறக்கும் ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகில் தொடங்கி வைத்து சைக்கிள் பேரணியில் கலந்துகொள்கிறார்.

இந்த சைக்கிள் பேரணி நேரு பூங்கா மெட்ரோ ரெயில் நிலையம், எல்.ஐ.சி. மெட்ரோ ரெயில் நிலையம், அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம், மெரினா நீச்சல் குளம் அருகே ஆகிய இடங்களில் தொடங்கி, தியாகராயநகர் பாண்டிபஜாரில் இரவு 9 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த பேரணியில் பங்கேற்க விரும்பும் பெண்கள் https://forms.gle/Y3GBdvtWJgpuRhKCA என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story