தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி, மனைவியுடன் கைது
![தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி, மனைவியுடன் கைது தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி, மனைவியுடன் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/06/19/1344357-dc.gif)
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி, மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துசாமி, அவரது மனைவி நாகூர் ஆஷியாள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது முத்துசாமி திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை திறந்து தனது தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அவரது தலையில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரது மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், 'நானும், எனது கணவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். நாங்கள் கடந்த 16 ஆண்டுகளாக அனுபவித்து வந்த நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். எங்கள் இடத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது. இதையடு்த்து தற்கொலைக்கு முயன்றதாக முத்துசாமி மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.