சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

திருவள்ளூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

திருவள்ளூர்


திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் திருவள்ளூர் பஜாரில் உள்ள ஒரு டீ ஸ்டாலில் ஒரு வருடமாக வேலை செய்து வந்தார். கடந்த 20-ந் தேதி காலை வழக்கம் போல் ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடைக்கு திருவள்ளுவர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் மெயின் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம் செல்லும் சாலை அருகே வந்தபோது திடீரென ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தார். இதில் ராதாகிருஷ்ணனுக்கு தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராதாகிருஷ்ணனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story