காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவருக்கு கத்தியால் வெட்டு


காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவருக்கு கத்தியால் வெட்டு
x

காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். தங்கை சாவுக்கு நீதான் காரணம் என அவரது கணவரை கத்தியால் வெட்டிய இளம்பெண்ணின் அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 19). இவருடைய கணவர் வடிவேல்(33). ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ராஜேஸ்வரிக்கும், வடிவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜேஸ்வரி, காதல் கணவருடன் கோபித்துக்கொண்டு எண்ணூர் சுனாமி குடியிருப்பில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

திருமணம் ஆகி 6 மாதத்திலேயே கணவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாயே? என்று ராஜேஸ்வரியை அவருடைய தந்தை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா நகர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை, அங்கு இருந்த மீனவர்கள் உதவியுடன் கடலில் விழுந்த மகளை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் உயிரிழந்த ராஜேஸ்வரியின் அண்ணன் ராஜேஷ் (25) தனது நண்பர்களுடன் ஆர்.கே.நகரில் உள்ள வடிவேல் வீட்டுக்கு சென்றார். "என் தங்கை ராஜேஸ்வரி சாவுக்கு நீ தான் காரணம்" என்று கூறி நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வடிவேலின் தலையில் வெட்டினார். மேலும் சரமாரியாக அடித்து உதைத்து இடது கையையும் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வடிவேல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story