நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்


நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 9:17 AM GMT)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நாமக்கல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக யுவராஜை போலீசார், நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

5-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கு நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து போலீசார் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதேபோல் இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த 5 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story