‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு போட்டால் சந்திக்க தயார்’ எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால்


‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு போட்டால் சந்திக்க தயார்’ எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால்
x
தினத்தந்தி 15 March 2021 11:20 PM GMT (Updated: 15 March 2021 11:20 PM GMT)

‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு போட்டால் சந்திக்க தயார்’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.

தஞ்சாவூர்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நேற்று மாலை திருவாரூரில் இருந்து தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பூண்டி கலைவாணன் (திருவாரூர்), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), ஜோதி ராமன் (நன்னிலம்), வேதரத்தினம் (வேதாரண்யம்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோரை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-

நான் தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் இருந்து தொடங்கி இருக்கிறேன். கலைஞர் வளர்ந்த, கலைஞரை உருவாக்கிய இந்த திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறேன். கலைஞரின் மகனாக வந்து இருக்கிறேன்.

முதல்-அமைச்சர் வேட்பாளராக வந்து இருக்கிறேன். இதுதான் எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்து இருக்கிறது.

234 தொகுதிகளிலும் வெற்றி

ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 16-வது தேர்தலாக இந்த தேர்தல் அமைந்து இருக்கிறது. இந்த தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தர வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் முதல் பிரசாரத்தை திருவாரூரில் இருந்துதான் தொடங்கி இருந்தேன். சட்டசபை தேர்தலிலும் முதன் முதலில் திருவாரூரில்தான் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம். இந்திய வரலாற்றில் 3-வது இயக்கமாக தி.மு.க. கம்பீரமாக அமர்ந்து இருக்கிறது.

இந்த சட்டசபை தேர்தலில் நாம் 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என 1 மாதத்திற்கு முன்பு சொன்னேன். 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என ‘இந்து’ ராம் டுவிட்டரில் சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க. ‘வாஸ் அவுட்’ என கூறி இருக்கிறார். அந்த நிலை தான் இன்றைக்கு இருக்கிறது. அந்த வெற்றியை தேடித்தர வேண்டும் என உங்களை நாடி, தேடி வந்து இருக்கிறேன்.

பொய்யை சொல்லி இருக்கிறார்

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தல் பிரசாரம் செய்யலாம். தவறு இல்லை. அதை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய பழனிசாமி வாய்க்கு வந்தபடி சொல்வது அத்தனையும் பொய். பொய்யை சென்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு (நேற்று முன்தினம்) தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணத்திற்கு கலைஞரும், மு.க.ஸ்டாலினும் தான் காரணம் என சொல்லி இருக்கிறார். 10 ஆண்டு காலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா உடல் நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவரது உடல்நலத்தை பற்றி கூட வெளியே சொல்லமுடியாத ஒரு ஆட்சியை நடத்தி கொண்டு இருந்தவர்கள் இவர்கள்.

வழக்கு போட்டால் சந்திக்க தயார்

நான் தொடர்ந்து பலமுறை சுட்டி காட்டி இருக்கிறேன். ஏன் தேர்தல் அறிக்கையில் கூட சொல்லி இருக்கிறேன். ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கையை நாம் ஆட்சிக்கு வந்தபிறகு எடுப்போம் என்று உறுதிமொழி தந்து இருக்கிறோம். அந்த பயம் காரணமாக இந்த கூற்றை கூறியிருக்கிறார். இது உண்மை என்றால் 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?. ஸ்டாலின் தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் அல்லவா?.

இப்போது சொல்கிறேன். தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணம் என வழக்கு போடுங்கள். சந்திக்க நான் தயார். நீங்கள் தயாரா? நான் ரெடி. பழனிசாமியே நீங்கள் ரெடியா?. எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாமா?.

ஜெயலலிதா மரணமே மர்மமாக இன்றைக்கும் இருந்து கொண்டு இருக்கிறது. 4 ஆண்டுகளாக விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை உண்மை வெளியே வரவில்லை.

மக்கள் நம்பமாட்டார்கள்

ஜெயலலிதாவுக்கும், நமக்கும் கொள்கை, லட்சியத்தில் வேறுபாடு இருக்கலாம். இறந்தது யார்?, ஒரு முதல்-அமைச்சர். இதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதனால் தான் தொடர்ந்து சொன்னேன். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேளையாக ஜெயலலிதா மரணத்தில் உண்மையை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு குற்றவாளிகளை அடையாளம் காட்டுவோம் என்று. நிச்சயமாக, சத்தியமாக சொல்கிறேன். இதை இந்த ஸ்டாலின் விடவே மாட்டான். இதை மூடி மறைக்க திட்டமிட்டு கலைஞர் தான் காரணம், ஸ்டாலின் தான் காரணம் என கூறுவதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆன பிறகு நீங்கள் தப்பிக்க முடியாது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையானது நாம் என்ன சொன்னோமோ அதன் ஜெராக்ஸ். அப்படியே காப்பி அடித்து விட்டார்கள்.

வெற்றி விழா கூட்டம்

ஆட்சிக்கு வரமாட்டோம் என்று தெரிந்தவுடன் அனைவருக்கும் விமானம் வழங்குவோம் என்று கூட முதல்-அமைச்சர் சொல்வார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க., ஆளும் கட்சியை போல் மக்களுக்கு சேவை செய்து வருகிறது. நாம் தான் ஆட்சிக்கு வர போகிறோம். சொன்னதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட திட்டங்கள் தொடர மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

13 ஆண்டுகளுக்கு பிறகு 1989-ம் ஆண்டு வெற்றி பெற்றவுடன் கலைஞர் திருவாரூர் தெற்கு வீதியில் தான் வெற்றிவிழா கூட்டத்தை நடத்தினார். இதேபோல் நாம் ஆட்சி்க்கு வந்தவுடன் திருவாரூரில் நிச்சயமாக வெற்றிவிழா கூட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு திருவாரூரை அடுத்த காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Next Story