ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார்


ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார்
x
தினத்தந்தி 16 March 2021 11:22 PM GMT (Updated: 16 March 2021 11:22 PM GMT)

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதற்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறார். 4 நாட்களில் 21 இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

சென்னை, 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற தேர்தலையொட்டி முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறார்.

4 நாட்களில் மொத்தம் 21 இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாளை பிரசாரத்தை தொடங்குகிறார்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை முதற்கட்ட சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, 18-ந் தேதி (வியாழக்கிழமை) திருவொற்றியூர் தேரடியில் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைதினம் திருவொற்றியூர், மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி தொகுதி வேட்பாளரகளை ஆதரித்து, முறையே திருவொற்றியூர் தேரடி, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், அம்பத்தூர் பஸ் நிலையம், போரூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பேசுகிறார்.

19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், உத்திரமேரூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பல்லாவரம், படப்பை, ராட்டினங்கிணறு, திருப்போரூர் பஸ் நிலையம், மேடவாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

20-ந் தேதி (சனிக்கிழமை) சைதாப்பேட்டை, தியாகராயநகர், விருகம்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ஆரிய கவுடா ரோடு, அண்ணாநகர், கொளத்தூர், திரு.வி.க.நகர், துறைமுகம், சேப்பாக்கம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராணிப்பேட்டையில் பிரசாரத்தை தொடங்கும் ஓ.பன்னீர்செல்வம், அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கீழ்வைத்தியணான் குப்பம், ஜோலார்ப்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, முத்துக்கடை, காட்பாடி, பள்ளிகொண்டா பஸ் நிலையம், வாணியம்பாடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story