குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தப்படாது - மு.க.ஸ்டாலின் உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 March 2021 8:47 AM GMT (Updated: 29 March 2021 8:47 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தப்படாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திருப்பத்தூர், 

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளநிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தப்படாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை அமல்படுத்த அதிமுக, பாமக ஆகிய கட்சிகள்தான் துணை நின்றன. சிறுபான்மையினருக்கு ஆதரவாக திமுக எப்போதும் குரல் கொடுக்கும். திமுக ஆட்சியில் குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தப்படாது” என்று கூறினார்.

Next Story