மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 April 2021 1:56 AM GMT (Updated: 1 April 2021 1:56 AM GMT)

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி, 

மேற்கு வங்காளத்தில் மம்தா போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. அசாமிலும் 39 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்தது. 2-ம் கட்ட தேர்தலை சந்திக்கிற 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே இதுவரை இல்லாத வகையில் கடும்போட்டி நிலவுகிறது. இந்த 30 தொகுதிகளில் மேற்கு வங்காளத்தின் கவனத்தை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்துள்ள தொகுதி நந்திகிராம்தான். இங்குதான் மம்தா களம் இறங்கி உள்ளார். அவருக்கும், அவரது நம்பிக்கைக்குரிய தலைவராக திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, தற்போது பா.ஜ.க.வுக்கு தாவியுள்ள சுவேந்து அதிகாரிக்கும் இடையேயான போட்டி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் மம்தா கட்சிதான் வெற்றிக்கனியை பறித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். மம்தா சக்கர நாற்காலியில் பம்பரமாய் சுழன்று பிரசாரம் செய்தார். ஆனால் பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி தொடங்கி அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் களம் இறங்கி வாக்கு சேகரித்தனர். தொகுதியில் வெளியாட்கள் குவிக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. என இரு தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ளன. நந்திகிராமில் 144 தடை உத்தரவுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த மாநிலத்தில் 30 தொகுதிகளில் 191 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம், இன்று 10 ஆயிரத்து 620 வாக்குச்சாவடிகளில் முடிவு செய்யப்படுகிறது. இந்த வாக்குப்பதிவுக்காக 651 கம்பெனி மத்திய போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் நேற்று இரவே வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் வந்து சேர்ந்தன. கொரோனா கால விதிமுறைகளின்படி வாக்காளர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். வாக்குச்சாவடிகளில் வெப்ப பரிசோதனைக்கு வாக்காளர்கள் உட்படுத்தப்பட்டு, கையுறை அணிந்துதான் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற அசாமில் இன்று 2-வது கட்ட தேர்தலை சந்திக்கிற 39 தொகுதிகளில் 345 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. வேட்பாளர்களில் 5 பேர் மந்திரிகள், ஒருவர் துணை சபாநாயகர்.

பா.ஜ.க. அசாம் கணபரிசத் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அசாம் ஜாதிய பரிசத் என மும்முனை போட்டி நிலவுகிறது. 73 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்காக 10 ஆயிரத்து 592 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 310 கம்பெனி மத்திய போலீஸ் படை குவிக்கப்பட்டு இருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

Next Story