தாராபுரம் பிரசாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

தாராபுரம் பிரசாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 31-ம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகிய இருவரும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் உயிரிழந்ததாக பேசியதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணங்கள் பற்றி தேர்தல் பரப்புரையில் பேசியது குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்கும்படி உதயநிதி ஸ்டாலினுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

இந்நிலையில் தாராபுரம் பிரசாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.  

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள பதில் கடிதத்தில், “கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் தான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இதனை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை. ஒரு பகுதி உரையை மட்டுமே கவனத்தில் கொண்டு, என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது” என்று அதில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story