ஓமன் - ஈரான் நாடுகளை புரட்டி போட்டது சஹீன் புயல்..!

சஹீன் புயல் காரணமாக ஓமன் மற்றும் ஈரான் நாடுகள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன.
மஸ்கட்,
சஹீன் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமன் நாட்டை தாக்கியது. மணிக்கு 120 முதல் 150 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தலைநகர் மஸ்கட்டில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின.சஹீன் புயல் கரையை கடந்த பின் வீரியத்தை இழந்தது என்று அங்குள்ள வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இந்த புயலின் காரணமாக ஈரானில் உள்ள சிஸ்டான் - பலுசெஸ்தான் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு துறைமுகத்தில் 6 பேர் பலியாகினர்.ஓமனில் சஹீன் புயல் கரையை கடக்கும் முன்னரே வெள்ளத்தால் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளதால் மிகவும் அவசியமான தேவைகளுக்காக மட்டும் வெளியே வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.மஸ்கட் நகரத்துக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.சாலைகள் மற்றும் மின் சேவை உபகரணங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.புயல் காரணமாக, ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அல்-குரம் பகுதியில் மின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 2700 பேர் அவசர கால பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஓமன் நாட்டை ஒட்டியுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-எய்ன் பகுதியில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story