அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள்; விரட்டியடித்த தைவான்


அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள்; விரட்டியடித்த தைவான்
x
தினத்தந்தி 29 Aug 2023 6:46 PM GMT (Updated: 30 Aug 2023 12:59 AM GMT)

தைவான் ஜலசந்தி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன.

தைப்பே,

சீனாவில் உள்நாட்டு போர் நடந்த பின்னர் தனிநாடாக தைவான் உருவானபோதிலும், தங்களுடைய நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி தைவான் என சீனா, தொடர்ந்து கூறி வருகிறது.

தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்தும் வருகிறது. தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இது சீனாவை கோபமூட்டியது. இதனால், அமெரிக்காவுக்கு எச்சரிக்கையும் விடுத்தது.

தொடர்ந்து தைவான் பகுதியில், தனது பலம் தெரியும் வகையில் ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டது. எனினும், தைவானுக்கு அவ்வப்போது அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், தைவானை சுற்றிலும் கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியில் இருந்து, செவ்வாய் கிழமை காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சீனாவின் 11 போர் விமானங்கள் மற்றும் 10 கடற்படை கப்பல்கள் தைவானுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

இதனை தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்தது. இவற்றில், ஹார்பின் பி.இசட்.கே.-005 ஆளில்லா விமானம் ஒன்று தைவான் ஜலசந்தியின் இடைக்கோட்டு பகுதியை மீறி உள்ளே நுழைந்துள்ளது. இது தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் வடகிழக்கு பிரிவிற்குள் அத்துமீறி சென்றுள்ளது.

இதன்பின்னர் அந்நாட்டை சுற்றி வந்து தென்மேற்கு மூலையில் இடைக்கோட்டை மீண்டும் கடந்து சென்றது. இதனை தொடர்ந்து, இரண்டு செங்டு ஜே-10 ரக போர் விமானங்களும் அந்த பகுதியை கடந்து சென்றன.

இதனால், அவற்றை விரட்டியடிக்க விமானங்கள், கப்பல்கள் மற்றும் தரை பகுதியை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி, சீன விமானங்களை தைவான் விரட்டியடித்தது.

தைவான் நாட்டில் இந்த மாதத்தில் இதுவரை சீனா, 362 போர் விமானங்களையும், 194 கடற்படை கப்பல்களையும் அனுப்பி இருந்தது. 2020 செப்டம்பரில் இருந்து, சீனாவின் இந்த நடவடிக்கை சீராக அதிகரித்து காணப்படுகிறது. தைவானும், தொடர்ந்து இதனை எதிர்கொண்டு வருகிறது.


Next Story