ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு


ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 March 2024 10:31 PM GMT (Updated: 24 March 2024 8:32 AM GMT)

ரஷியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

மாஸ்கோ,

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் கிராஸ்னோகோர்க் நகரில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கு உள்ளது. இங்கு கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில் நேற்று முன் தினம் பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது அந்த அரங்கத்திற்குள் புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இந்த தாக்குதலில் இசை அரங்கு முழுவதும் தீ பற்றியது.

இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலில் 115 பேர் உயிரிழந்திருந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேரை ரஷிய பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன? பின்னணியில் உள்ளது யார்? என்பது குறித்து ரஷிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story