“ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்” - ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை


“ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்” - ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2019 11:15 PM GMT (Updated: 11 Dec 2019 10:49 PM GMT)

ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள் என ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷிய அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

இந்த புகார் தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு சுமார் 2 ஆண்டு காலம் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததது. அதில், 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ரஷியாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட கூடாது என ரஷியாவுக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “செர்ஜி லாவ்ரோவுடன், உக்ரைன் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்திய ஜனாதிபதி டிரம்ப், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கு ரஷியா எந்தவொரு முயற்சிகளையும் செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டிரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த செர்ஜி லாவ்ரோவ், தாங்கள் இருவரும் தேர்தல் குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை என கூறினார்.

Next Story