தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சம்


தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சம்
x
தினத்தந்தி 24 Nov 2021 10:05 AM GMT (Updated: 24 Nov 2021 10:05 AM GMT)

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சமீபத்தில் தான் அந்நாட்டு அரசு சமூக இடைவெளி விதிகளை தளர்த்தியது.

சியோல், 

தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு முதல் முறையாக அந்நாட்டில் தினசரி பாதிப்பு  4 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. 

டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் வைரஸ் பரவல் அதிமாக இருப்பதாக  அந்நாட்டு அதிகாரிகள்  தெரிவித்தனர். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சமீபத்தில் தான் அந்நாட்டு அரசு சமூக இடைவெளி விதிகளை தளர்த்தியது கவனிக்கத்தக்கது. 

தென்கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமை கொரோனா பரவல் குறித்து கூறுகையில், “ தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவாக  ஒரே நாளில் 4,116- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின்   எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,363- ஆக உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.  அமெரிக்காவிலும் தற்போது கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. ஆஸ்திரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களை கலங்க வைத்துள்ளது.

Next Story