சரக்கு கப்பலில் தீ விபத்து: நடுக்கடலில் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் எரிந்து சேதம்


சரக்கு கப்பலில் தீ விபத்து: நடுக்கடலில் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 18 Feb 2022 10:55 AM GMT (Updated: 18 Feb 2022 10:58 AM GMT)

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகளுக்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

போர்ச்சுகீஸ்,

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் சரக்கு கப்பல் ஒன்று ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை  ஏற்றிக் கொண்டு டெக்சாஸ் துறைமுகம் புறப்பட்டது . பெலிசிட்டி ஏஸ் என்ற அந்த மிகப்பெரிய பனாமா கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் போர்ச்சுகீஸ் கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து சென்றுகப்பலில் இருந்த 22 பேரை பத்திரமாக மீட்டு ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச்சென்றனர்.

இந்த சரக்கு கப்பலில் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்ய இருந்த லம்போர்கினி, போர்ஷே, ஆடி உள்பட சுமார் 3965 சொகுசு கார்கள் இருந்தன. நூற்றுக்கும்  மேற்பட்ட கார்கள் டெக்சாசில் உள்ள துறைமுகத்தில் இறக்குமதி செய்ய இருந்தன.

இந்நிலையில், கப்பலில் இருந்த சொகுசு கார்கள் தீயில்  சிக்கியுள்ளன. இதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டில் கிராண்டே அமெரிக்கா கப்பல் தீப்பிடித்தபோது சுமார் 2000-க்கும் அதிகமான சொகுசு கார்கள் தீயில் எரிந்து மூழ்கின.

விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் சிக்கிய கார்களின் எண்ணிக்கை குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.


Next Story