தைவானை சுற்றி வட்டமிட்ட சீனாவின் 30 விமானங்கள், 9 கப்பல்கள்


தைவானை சுற்றி வட்டமிட்ட சீனாவின் 30 விமானங்கள், 9 கப்பல்கள்
x

தைவானை சுற்றி கடந்த மார்ச் மாதத்தில், சீனாவின் 359 ராணுவ விமானங்கள் மற்றும் 204 கடற்படை கப்பல்கள் கண்டறியப்பட்டன என தைவான் நியூஸ் தெரிவிக்கின்றது.

தைப்பே,

சீனாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாக தைவானை அந்நாடு பார்க்கிறது. எனினும், தைவான் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுகரம் நீட்டி வருகிறது. இதனால், ஆத்திரமடைந்துள்ள சீனா, அவ்வப்போது தைவானை சுற்றி ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சீனாவை சேர்ந்த 30 ராணுவ விமானங்கள், 9 கடற்படை கப்பல்கள் இன்று காலை தைவான் நாட்டை சுற்றி வந்தன. இதுபற்றி அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான காலகட்டத்தில், தைவானின் வடக்கு மத்திய பகுதியில் மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டல பகுதியிலும் சீனாவின் 20 விமானங்கள் நுழைந்தன என தெரிவித்துள்ளது.

நிலைமையை தைவான் ஆயுத படைகள் கண்காணித்து வருகின்றன. இதற்கு பதிலடி தர படைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. தைவான் நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் 7 கடற்படை கப்பல்கள் மற்றும் 6 ராணுவ விமானங்கள் நேற்று தைவானை சுற்றி வந்தன. இவற்றில் 2 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் மத்திய பகுதியில் நுழைந்தன என தெரிவித்தது.

கடந்த மார்ச் மாதத்தில், தைவானை சுற்றி சீனாவின் 359 ராணுவ விமானங்கள் மற்றும் 204 கடற்படை கப்பல்கள் கண்டறியப்பட்டன என தைவான் நியூஸ் தெரிவிக்கின்றது. தைவானின் வான் மற்றும் கடல் பகுதிகளை சுற்றி இயக்கி வரும் கடற்படை கப்பல்கள் மற்றும் ராணுவ விமானங்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தைவானுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனினும், இதற்கு தைவான் பதிலடியும் கொடுத்து வருகிறது.


Next Story